articles

உலகின் அதிசயம் நீ - சரிதா ஜோ

      “என்னை விடு! என்னை விடு! அய்யோ வலிக்குது. ப்ளீஸ்! என்ன விடு! என்னை யாராவது காப்பாற்ற மாட்டீர்களா! இப்படி நான் இதுவரை உன் உருவில் பார்த்ததே இல்லை. விளையாடாதே விட்டுவிடு உன்னைக் கடித்து விடுவேன்” என்று கத்தியது புழு ஒன்று.

    அடடே! உன்னை எப்படி விட முடியும். நீ தான் எனக்கு இன்றைய உணவு. அதுவும் சத்துமிக்க உணவு” என்றது வீனஸ்செடி.

    சாரல் மழை பெய்து கொண்டிருந்த மலைக்காட்டின் மாலை நேரத்தில் இந்தப் பேச்சுக்களைக் கேட்டு அங்கு பறந்து கொண்டிருந்த வண்டு ஒன்று அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க தோதாக அங்கிருந்த பூ ஒன்றின் மீது அமர்ந்தது.

   “காலம் காலமாக நீங்கள்தான் எங்களைச் சாப்பிட வேண்டுமா? இன்று நாங்கள் உங்களை சாப்பிட போகிறோம்” என்றது வீனஸ்.

    “என்னது சாப்பிட போகிறாயா? நீயா? என்னையா? கேவலம் நீ ஒரு சைவ உணவு சாப்பிடும் செடி. என்னைப் போல் ஒரு புழுவை உன்னால் சாப்பிட முடியுமா?”என்று கேட்டது புழு.

    “ஏன் முடியாது இன்னும் சற்று நேரத்தில் நான் உன்னை சாப்பிடப் போகிறேன்” என்று கூறி ‘ஹ ஹ ஹ’ என்று சத்தமாச் சிரித்தது அந்தச் செடியின் இதழ்கள். “என்னடா இது உல்டாவாக இருக்கிறதே.

     நாம் கனவு ஏதும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டே பூவிலிருந்து எழுந்து பறந்து போய் வட்டமடித்து பிறகும் மீண்டும் பூவின் மீது அமர்ந்து கொண்டு இது கனவு இல்லை நிஜம் தான் என்று நினைத்துக் கொண்டே என்ன நடக்கிறது என்று மீண்டும் உற்றுக் கவனிக்க ஆரம்பித்தது வண்டு.

    “உன் உடம்பில் முட்கள் இருக்கிறது. அது குத்துகிறது எனக்கு வலிக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நீ என்னை சாப்பிடுவாய் என்று சொன்னாய் பார்! இதுதான் என்னுடைய இந்த வலியிலும் எனக்கு சிரிப்பைத் தருகிறது. இன்னும் சற்று நேரத்தில் நான் உன்னை சாப்பிட போகிறேன் என்று கூறியது புழு.

   “என் இலையில் மாட்டி கொஞ்சம் கொஞ்சமாக உன்னுடைய உயிர் பிரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட உன்னுடைய திமிர் இருக்கிறதே” என்றது இலைகள்.

   இலைகள் மேலும் இறுக இறுக புழு பேச்சற்ற நிலைக்குச் சென்றது. வளைந்து நெளிந்து தப்பிக்கப் பார்த்து முடியாமல் அமைதியானது.

   பூவிலிருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த வண்டு அதிர்ச்சி அடைந்தது அப்பொழுது பூவையும் அந்தச் செடியின் இலைகளையும் மாறி மாறி பார்த்து மேலே பறக்க எழுந்தது.

   “பயப்படாதே! பயப்படாதே! நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்” என்றது பூ. “உன்னை எப்படி நம்புவது. நீயும் அந்த இலை போல் என்னை மூடிக்கொள்வாய்.

   அந்தச் செடியில் இருந்து வந்த பூ தானே நீ” என்று கேட்டது வண்டு. “யோசித்துப்பார்! அப்படிச் செய்வதென்றால் வந்த உடனே செய்திருப்பேனே.

    அந்த சக்தி எனக்கு இல்லை. அது இலைகளுக்கு மட்டுமே உண்டு” என்றது பூ. “என்னது?” என்று கேட்டது வண்டு.

    “அப்படி சக்தி ஏதாவது எங்களுக்கு இருந்திருந்தால் எங்கள் இனம் எப்படித் தழைக்கும். உங்களால்தான் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது.

    எங்கள் அடுத்த தலைமுறை வருகிறது. இல்லையென்றால் நாங்கள் என்றோ அழிந்திருப்போமே” என்றது பூ.

   “என்னுடைய தோழி இது பற்றி ஏற்கனவே ஒரு முறை என்னிடம் கூறியிருக்கிறாள். ஆனால், அதை நான் நம்பவில்லை.

    இப்பொழுது நேரில் பார்த்ததும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை” என்றது வண்டு. “நீண்ட வருடங்களுக்கு முன்பு பெரிய பெரிய ஆராய்ச்சியாளர்கள் கூட இதை நம்பவில்லை.

    இப்படி எல்லாம் செடிகள் மாமிசம் சாப்பிட வாய்ப்பே இல்லை என்றுதான் கூறினார்கள்.

   ஆனால் டார்வின் என்று ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சி செய்து இப்படி செடி மாமிசம் உண்மையாக இருப்பது உண்மைதான் என்று நிரூபித்த பின்பு தான் நம்பினார்கள், தெரியுமா?” என்று கேட்டது பூ. 

   “அதுதான் எனக்கும் புரியவில்லை. இந்த உலகில் இதுவரை சைவ உணவு மட்டுமே சாப்பிடும், வேர்களின் வழியாக மண்ணில் இருந்து சத்துக்களை எடுத்து சூரிய ஒளியில் தங்களது உணவை தயாரிக்கும் ஒரு உயிரி அதுவும் எவ்வளவு சிறிய செடி ஒரு மாமிச உண்ணி.

     பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது” என்றது வண்டு. “என்ன செய்வது உயிர் வாழ்ந்தாக வேண்டுமே அதற்காகத்தான்” என்றது பூ. “என்னது. உயிர் வாழ வேண்டுமா? அதுதான் மண்ணிலிருந்து கிடைக்கிறதே பிறகு என்ன?” என்று கேட்டது வண்டு. “பொதுவாகவே செடிகள் உயிர் வாழ்வதற்கு ஏராளமான சத்துக்கள் தேவைப்படுகிறது.

   இந்த மழைக்காடுகளில் இருக்கும் மண்ணில் அந்தச் சத்துக்கள் மிகக் குறைவாக இருக்கிறது. குறிப்பாக நைட்ரஜன். அதை சமன்படுத்த புழுக்களை பூச்சிகளை பிடித்து அதிலிருந்து இந்தச் சத்துக்களை எடுத்துக் கொள்கிறோம். இதில் என்ன தவறு?”என்று கேட்டது பூ “ஆனாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறல்லவா.

    பாவம் இல்லையா. உங்களைப்போல செடிகள் வாடிய போது வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் பாடினார்.

   ஆனால் நீங்கள் உயிரை கொல்வதை பார்த்து இருந்தால்... என்று வண்டு கூறிக் கொண்டிருந்த போது.. “பார்த்திருந்தால் என்ன?” என்றது பூ. “அப்படிப் பாடியதை எண்ணி வருந்தி இருப்பார்” என்றது வண்டு.

   “புலி சிங்கம் நரி மாதிரியான உயிரினங்கள் பிற உயிர்களை அடித்து கொன்று தின்று தானே வாழ்கிறது.

   அதுபோலத்தான் வாழ்வதற்கு தேவையானதை எங்கிருந்து எடுக்க முடியுமோ அங்கிருந்து தானே எடுக்க முடியும்” என்றது பூ.

  “பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பூவிலிருந்து தடுமாறி கீழே இருந்த இலைக்குள் விழுந்தது வண்டு.

    வண்டு விழுந்தவுடன் சிறிது நேரத்தில் இலை வண்டை மூட ஆரம்பித்தது. அவ்வளவுதான் என்று மனசுக்குள் நினைத்தது வண்டு.

    சிறிய வண்டாக இருந்ததனால் அங்குமிங்கும் ஓடியது முடிவில் அங்கிருந்த சிறிய ஓட்டையின் வழியாக தப்பித்து வெளியே வந்து மீண்டும் மலரின் மேல் பறந்து வந்து அமர்ந்தது.

   “ஒரு நிமிடத்தில் எனக்கு உயிரே போய்விட்டது. எப்படியோ தப்பித்து வந்து விட்டேன். நான் எப்படித் தப்பித்தேன்?” என்று கேட்டது பூவிடம் வண்டு.

    உன்னை போல சிறிய உயிரினங்களுக்காக எல்லாம் எனது இலைகள் தன்னுடைய சக்தியை உபயோகிக்காது. உங்களிடம் இருந்து கிடைக்கும் சத்துக்கள் மிகக் குறைவு.

   அதனால் இலை மூடும் பொழுது சிறு துளை இருக்கும் அந்த துளையின் வழியாக சிறு பூச்சிகள் வெளியே வந்துவிட ஏதுவாக தான் இலையை மூடும்”  என்றது பூ.

  “பார்ரா எவ்வளவு அறிவாக இருக்கிறது. சரி எப்படி ஒரு உயிரி இலை மேல் விழுந்ததும் அது உணர முடிகிறது?” என்று கேட்டது வண்டு.

   “இலைகளுக்குள் ஒரு சென்சார் இருக்கிறது” என்றது பூ. “என்னது சென்சாரா! அப்படி என்றால்?” என்று கேட்டது வண்டு.

  “சின்னச் சின்ன முட்கள் உள்ளே இருக்கிறது. உள்ளே செல்லும் உயிரே அதன் மீது முதல் முறையாகப் படும்பொழுது மூடாது.

    இரண்டாவது முறையாக படும் பொழுதுதான் மூடும். உள்ளே விழுபவை சிறு தூசாக இலையாக இருக்கும் பொழுது அது மூடாது உயிர் உள்ள இதுபோன்ற புழு பூச்சிகள்தான் நெளிந்து மறுபடியும் படும்பொழுது அவை மூடிக்கொள்ளும்” என்றது பூ.

    “இதுவரை மனிதர்கள்தான் தங்களை அறிவாளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களையும் மிஞ்சி விடுவீர்கள் போலிருக்கிறதே “ என்றது வண்டு. “மழை எந்நேரமும் பொழிந்து கொண்டிருக்கிறது. மழைத்துளிகள் அதில் விழுந்தால் மூடி விடுகிறதா? நீ பார்த்தாயா? கவனித்தாயா?” என்று கேட்டது பூ.

    “ஆமாம் மழைத்துளிகள் விழுந்தால் மூடவில்லையே!” என்றது வண்டு. “அதுவும் இலைகளுக்குத் தெரியும்” என்றது பூ. ஆமாம் உன் பெயர் என்ன என்று கேட்டது வண்டு. வீனஸ் என்று கூறியது பூ. “வீனஸ்! உலகின் அதிசயம் நீ!” என்று கூறிக்கொண்டே பறந்து சென்றது வண்டு.